Sunday, January 26, 2014

பிரபஞ்சனின் - `மானுடம் வெல்லும்` Beating Mankind Noval-Prapanjan-critics

பிரபஞ்சனின் - `மானுடம் வெல்லும்`

manudam 
தமிழில் இதுகாறும் வெளிவந்துள்ள நாவல்கள் என விளித்துக்கொள்ளும் வரலாற்று நாவல்கள் நாவல்களே இல்லை. அவை வரலாறும் அல்ல,நாவலும் அல்ல? அவைகள் பொய்ம்மைகள். அவைகளைப் படைப்பெனல் நரியை பரியென்பது போலாம்.

- என முன்னுரையிலேயே படிப்பவர்களை நோக்கி உரையாடத் தொடங்குகிறது பிரபஞ்சனின் `மானுடம் வெல்லும்` புதினம்.சமூக நாவலுக்கு முன்னர் வெளியான அனைத்து புனைவுகளும் வரலாற்றுப் பார்வையை மையமாகக் கொண்டவை. பொன்னியின் செல்வன் வரலாற்று நாவல்களில் அதிகம் வரவேற்பு பெற்ற புத்தகம். இதற்கினையாக சாண்டில்யன் எழுதிய பல கதைகளும் வரலாற்று புதினங்களாக இன்றும் படிக்கப்பட்டு வருகின்றன. இவை இரண்டும் வரலாற்று நாவல்களின் சிறந்த மாதிரியாக இருந்தாலும், பாலகுமாரனின் உடையார் இவ்வரிசையில் பழங்கால ஐதீகங்களை மிக நெருக்குமாகக் கொண்டு வளர்ந்த புனைவு. உடையார் ஒரு இனக்குழுவின் வரலாறாக அமைந்தது.பல துண்டுகளாகச் சிதறிய கண்ணாடியில் தெரியும் உதிரி பிம்பங்களைக் கொண்டு ஒருமுழு சித்திரத்தை உருவாக்கும் முயற்சியே வரலாற்றை எழுதுதல். துண்டுகளில் தெரியும் பிம்பத்தை கற்பனை வழியே இணைத்தல் புனைவுக்கு வழி வகுக்கும். நேர்த்தியான வரலாற்றாசிரியன் இருண்ட இப்பகுதிகளை மனித வரலாற்றின் துணை கொண்டு நிரப்புவான். சாமுவேல் பெபிஸின் நாட்குறிப்பிலிருந்து பதினேழாம் நூற்றாண்டு ஆங்கிலேயர் வாழ்கை தெரிவது ஒரு உதாரணம். இவ்வகை மனிதர்களின் வாழ்கையிலிருந்து வரலாற்றை நிரப்பும் பொறுப்பு வரலாற்றாசியரின் கையில் இருந்தாலும், அதில் கற்பனை சேர்த்து விரிவடையும் போது அப்புனைவு பல சாத்தியங்களை உருவாக்குகிறது.ஒரு வரலாற்று நிகழ்வாக சிலப்பதிகாரத்தை நாம் படித்தாலும், தமிழ் இனத்தின் வரலாறாக ஜெயமோகனின் கொற்றவை அதை நம் முன் நிறுத்துவது போல் எதிரெதிரே நிறுத்தி வைக்கும் கண்ணாடியாக, வரலாறும் கற்பனையும் ஒன்றை ஒன்று விழுங்கியபடி வளர்ந்து காப்பியமாக உருவெடுக்கிறது. கொற்றவையில் விரிவடையும் இக்கற்பனை, பல வரலாற்று நிகழ்வுகளை தன்னுள் கொண்டு புதுக்காப்பியமாகிறது.இவ்வகையில் பிரபஞ்சனின் `மானுடம் வெல்லும்` - ஒரு தேர்ந்த வரலாற்றாசிரியன் தன் முன் இருக்கும் செய்திகளைக் கொண்டு மக்களின் பன்முக வரலாற்றை கற்பனை மூலம் முழுமை செய்யும் படைப்பாகிறது.நாவலின் முன்னுரை தமிழில் வெளியான வரலாற்று புனைவுகளை நிராகரிக்கிறது. இந்நாவல் ராஜாக்களின் கதையல்ல. அவர்கள் வாழ்கையில் அனுபவித்த கேளிக்கைகள், நடத்திய போர், ஆக்கிரமிப்புகள் பற்றிய தொகுப்பல்ல. சாமானிய பிரஜைகளின் வாழ்வை நெருக்கமாக காட்டும் சம்பவங்களின் தொகுப்பு. பிரெஞ்சு நெறிகளை பிரதியெடுக்க முற்படும் மக்கள், தமிழ் மரபை புரிந்துகொள்ள முயற்சிக்கும் பிரெஞ்சு துபாஷிகள் என ஒரேசமயம் பல முரணியக்க உணர்வுகளை இந்நாவல் காட்டிச்செல்கிறது.மாமனிதர்களின் வாழ்வே வரலாறு என்ற காலந்தொட்டு வந்த தமிழ் புனைவை இந்நாவல் மாற்றி அமைக்கிறது. போர்,வீரம்,காதல் போன்ற மரபார்ந்த பார்வையே தமிழ் இலக்கியத்தின் வரலாற்று தொகுப்பாக இருந்து வந்ததால், சாமானியர்களின் வாழ்வு தொகுக்கப்படாமலேயே மறைந்து வந்திருக்கிறது. இந்த வசவு என்னால் தீர்ந்தது என பிரபஞ்சன் கூறுவதில் உள்ள உண்மை நாவல் முழுவதாக படித்து முடிந்தவுடன் புரிகிறது.பதினெட்டாம் நூற்றாண்டில் புதுவையின் துபாஷியாக இருந்த ஆனந்தரங்கப்பிள்ளை எழுதிய நாட்குறிப்பு இந்நாவலுக்கு மிக பலமான அஸ்திவாரம். துய்மா பிரான்ஸிலிருந்து 1735ஆம் ஆண்டு கவர்னராக புதுவைக்கு வருகிறார். ஏழாண்டுகளுக்குப் பிறகு மீண்டும் பிரான்ஸுக்கு சென்றுவிடுகிறார். இடைபட்ட காலத்தில் நடக்கும் தென் நாட்டு அரசியலைக் கொண்டு பாண்டிச்சேரியின் வரலாற்றை சொல்ல முற்படுகிறது இப்புதினம்.ஆனந்தரங்கப்பிள்ளையின் நாட்குறிப்பு கிட்டதட்ட 12 தொகுப்புகளாக வெளிவந்துள்ளது. இவை தமிழிலும், ஆங்கிலத்திலும் கிடைக்கின்றன. பெரும்பாலும் அவர் துபாஷியாக இருந்த நாட்களில் எழுதப்பட்டவை. பாண்டிச்சேரியின் பிரெஞ்சு காலனியாதிக்க துவக்கத்தை இந்த நாட்குறிப்பில் தெளிவாகப் புரிந்து கொள்ள முடியும். வாணிபத்துக்காக புதுச்சேரிக்கு வந்த பிரெஞ்சு அரசு மெல்ல தமிழரின் பழக்கவழக்கங்களை புரிந்து கொள்ளத் துவங்கும் காலகட்டத்தின் இந்நாவல் ஆரம்பிக்கிறது.கவர்னருக்கு மக்களின் குலப் பிரிவினைகள் புரிவதில்லை. அவற்றை விளக்க நம் துபாஷிகள் உதவுகிறார்கள். நாவலின் ஆரம்பத்தில் வரும் ஒரு சம்பவம் -  கவர்னர் தினமும் காலை வேளையில் நகர்வலம் போவார். ஒரு நாள், காலைகடன்களுக்காக கடற்கரை ஓரமாக வரிசையாக உட்கார்ந்திருக்கும் மக்களைப் பார்த்து வருத்தப்படுகிறார் - ஓலைத் தடுப்பு சட்டம் மூலம் காலைகடன்களை மறைமுகமாக முடித்துக் கொள்ள வழிவகுக்கிறார். இச்சட்டம் ஆனந்தரங்கப்பிள்ளையின் நாட்குறிப்பில் உள்ளது. ஆனால் அதற்கு மக்களின் எதிர்வினை எங்கும் பதியப்படாததால், பிரபஞ்சன் தன் கற்பனை மூலம் செய்திகளைத் தாண்டிச் சென்று முழுமைப்படுத்துகிறார்.கோவில் தாசியான கோகிலாவின் கதை - அந்நாளைய தாசியின் காரியங்களை எதிர்க்கத் துவங்கும் தலைமுறையின் வாழ்வு முறையை கூறிச்செல்கிறது. ஊர் பெரியவர்களின் மார்பில் சந்தனம் பூச அவர்களின் கோபத்துக்கு பயப்படாமல் கோகிலா மறுக்கிறாள். அவளுக்குத் துணையாக கோயில் அர்ச்சகர் வாதிடுகிறார். தாசி குலத்தின் அன்றைய இயல்புகளை இந்நிகழ்வு வெளிப்படுத்தினாலும், சமூகத்தில் இப்பழக்கத்தை எதிர்த்தவர்களும் இருந்ததையும் பதிவு செய்கிறது.நாவலின் வரும் முக்கியமான கட்டம் பிரெஞ்சு துரைக்கும், தஞ்சை அரசருக்கு நடக்கும் அரசியல் ஒப்பந்தத்தில் ஆரம்பிக்கிறது. இதுவே இந்நாவலின் கதைக்களன். இந்த அரசியல் சதுரங்கத்தைக் கொண்டு மற்ற கதைகளை நகர்த்திச் செல்லப்பட்டுள்ளது.பிரெஞ்சுப் படை தஞ்சையை பாதுகாத்தால் காரைக்கால், கருக்களாச்சேரி கோட்டைகள் புதுச்சேரிக்கு அன்பளிப்பாக தரப்படும் என தஞ்சை அரசர் சாயாஜியும் கவர்னர் துய்மாவும் செய்து கொள்ளும் ஒப்பந்தம். நாவலின் அடிப்படை கரு இந்த அரசியல் நிகழ்வை சுற்றி அமைந்திருக்கிறது. காரைக்கால் தனிப்பகுதியாக கொடுங்கோல் ஆட்சியின் கீழ் அவதிப்பட்டுக்கொண்டிருக்கிறது. தினம் நடக்கும் போரால்,மக்களுக்கு ஆட்சியில் இருக்கும் ராஜாவின் பெயர் கூடத் தெரியாமல் ராமன் ஆண்டாலும், ராவணன் ஆண்டாலும் தங்களுக்குத் திண்டாட்டமான வாழ்வே என வருத்தப்படுகிறார்கள். அப்பகுதி வழியாக செல்லும் மராட்டிய, வடக்கு ராஜாக்களின் படைவீரர்களை கொண்டே அம்மக்களின் அவஸ்தையை பிரபஞ்சன் விளக்குகிறார்.

போரின் கொடுமைகளையும் விஞ்சி நிற்கக்கூடியதாக,படை வீரர்களின் அழிப்பு வெறி போர்முனையைத் தாண்டியும் விரிவடைவதைக் இந்நாவல் காட்டுகிறது. குறிப்பாக ஒரு கிராமத்தின் வழியே செல்லும் படைவீரர்களின் புழுதி கிளப்பும் சித்திரம் நம்மை விட்டு அகல மறுக்கிறது. மகளின் திருமணத்துக்காக வளர்க்கும் நெற் பயிற்கள், தானியங்களை அழித்துச் செல்லும் படைவீரர்கள் திசையைப் பார்த்து-`ஐயோ என் மகளே` என அழும் ஓலம் போரின் உக்கிரத்தை தாண்டி மனிதனின் அரக்க குணத்தை சொல்லாமல் சொல்லிச் செல்கிறது.புதுச்சேரி இனக்குழுவின் தொகுப்பாகவும் இப்புத்தகத்தை நாம் வாசிக்க முடியும். கவர்னர் துய்மா அதிகாலை வேளை நகர்வலத்தின் போது பார்க்கும் காட்சிகளை பதிவு செய்யும்போது அன்றைய மக்களின் வாழ்வு முறை தொகுக்கப்படுகிறது. அதே போல், அக உலகை இன்னும் ஆழமாகப் பதிவு செய்ய புற உலகின் இயற்கை வர்ணனைகளை பிரபஞ்சன் அதிகமாக பயன்படுத்தியுள்ளார்.பிரெஞ்சு மக்களைப் போன்ற பழக்க வழக்கத்தை பின் பற்றத் துடிக்கும் தமிழர்கள், தினமும் நாட்குறிப்பு எழுதி அன்றாட அரசியலை மறுபரிசீலனை செய்யும் ஆனந்தரங்கப்பிள்ளை, அவருடன் தினச்செய்திகளைக் கேட்டு விவாதிக்கும் பண்டிதர், தேவதாசிகளின் வாழ்வை நிராகரிக்கும் கோகிலாம்பாள், அவளுடைய தம்பி போல் கூடவே இருக்கும் வெகுளியான குருசு எனப் பலதரப்பட்ட கதாபாத்திரங்கள் வழியே புதுச்சேரியின் அன்றைய அரசியல், சமூக வாழ்வு விரிவடைகிறது.இப்படி பல கதாபாத்திரங்களின் செய்திகளாக வளர்வதால், நாவலில் ஒரு மையக் கரு இல்லாதது போலத் தோன்றும். இதை ஒரு குறையாகவே விமர்சனம் செய்யப்பட்டுள்ளது. ஆனாலும், ஆங்காங்கே தோன்றும் மக்களின் வாழ்கையிலிருந்து ஒரு தொகுப்பாக அக்காலகட்டம் நம் முன்னே நிற்க வைக்க இது மிக நல்ல உத்தியாகவே தோன்றுகிறது. சில பக்கங்களே வந்தாலும் இந்நிகழ்வுகள் வரலாற்றின் ஒரு இழையை தக்க வைத்துகொள்வதால் ஒரு பெரும்  வரலாற்றுத் தொகுப்புக்கான முகாந்திரம் இந்நாவலுக்கு அமைகிறது.பிரபஞ்சன் எழுதிய வரலாற்று புதினத்தில் `மானுடம் வெல்லும்` முதல் பகுதி. இரண்டாவது பகுதியில் ஆனந்தரங்கப்பிள்ளையின் முழு வாழ்கையும்,அதற்கடுத்தப் பகுதியில் புதுவையின் சுதந்திரப்போராட்ட வரலாறும் புனைவாக்கப்பட்டுள்ளது.தமிழில் தக்க வரலாற்றுப் புதினம் தோன்ற இல்லையே என்ற வசை என்னால் ஒழிந்தது என பிரபஞ்சன் கூறுவதற்கு நூறு சதவிகிதம் பொருத்தமான நாவலாக இது அமைந்திருக்கிறது
.byhttp://beyondwords.typepad.com/ ரா.கிரிதரன்

No comments: